மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
44. எண்ணப்பதிகம்
தில்லையில் அருளியது
ஒழியா இன்பத்து உவகை
அறுசீர் ஆசிரிய விருத்தம்
பாருரு வாய பிறப்பற வேண்டும்
    பத்திமை யும்பெற வேண்டுஞ்
சீருரு வாய சிவபெரு மானே
    செங்க மலம லர்போல்
ஆருரு வாய என்னா ரமுதே
    உன்அடி யவர்தொகை நடுவே
ஓருரு வாயநின் திருவருள் காட்டி
    என்னையும் உய்யக்கொண் டருளே.
1
உரியேன் அல்லேன் உனக்கடிமை
    உன்னைப் பிரிந்திங் கொருபொழுதுந்
தரியேன் நாயேன் இன்னதென்
    றறியேன் சங்கரா கருணையினாற்
பெரியோன் ஒரவன் கண்டுகொள்
    என்றுன் பெய்கழல் அடிகாட்டிப்
பிரியேன் என்றென் றருளிய அருளும்
    பொய்யோ எங்கள் பெருமானே.
2
என்பே உருக நின்அருள்
    அளித்துன் இணைமலர் அடிகாட்டி
முன்னே என்னை ஆண்டு
    கொண்ட முனிவா முனிவர் முழுமுதலே
இன்பே அருளி எனையுருக்கி
    உயிருண் கின்ற எம்மானே
நண்பே யருளாய் என்னுயிர்
    நாதா நின்னருள் நாணாமே.
3
பத்தில னேனும் பணிந்தில
    னேனும்உன் உயர்ந்தபைங் கழல்காணப்
பித்தல னேனும் பிதற்றில னேனும்
    பிறப்பறுப் பாய்எம் பெருமானே
முத்தனை யானே மணியனை
    யானே முதல்வனே முறையோஎன்று
எத்தனை யானும் யான்தொடர்ந்
    துன்னை இனிப்பிரிந் தாற்றேனே.
4
காணும தொழிந்தேன் நின்திருப்
    பாதங் கண்டுகண் களிகூரப்
பேணும தொழிந்தேன் பிதற்றும
    தொழிந்தேன் பின்னைஎம் பெருமானே
தாணுவே அழிந்தேன் நின்னினைந்
    துருகுந் தன்மைஎன் புன்மைகளாற்
காணும தொழிந்தேன் நீயினி
    வரினுங் காணவும் நாணுவனே.
5
பால்திரு நீற்றெம் பரமனைப்
    பரங்கரு ணையோடும் எதிர்ந்து
தோற்றிமெய் யடியார்க் கருட்டுறை
    யளிக்குஞ் சோதியை நீதியிலேன்
போற்றியென் அமுதே எனநினைந் தேத்திப்
    புகழ்ந்ததைத் தலறியென் னுள்ளே
ஆற்றுவ னாக உடையவ
    னேஎனை ஆவஎன் றருளாயே.
6
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com